TamilNatpu


3.13.2011

முக்கிய தகவல் - ஓட்டுச்சீட்டில் உங்கள் பெயர் உள்ளதா என அறிய

இணையதள நண்பர்களே,


இதோ சட்ட மன்றத் தேர்தல் கைகெட்டும் தூரத்தில் வரப்போகிறது.
எந்தக் கட்சி எந்தக் கட்சியுடன் வேண்டுமானாலும் கூட்டணி வைத்துகொள்ளட்டும். நாம் நம்முடைய வாக்கை அளித்து நம்முடைய
ஜனநாயகக் கடமையை ஆற்றலாமே.

தங்களுடைய பெயர் வாக்குச் சீட்டில் உள்ளதா என் அறிய கீழ்க்கண்ட
சுட்டியை பார்க்கவும்

http://www.elections.tn.gov.in/eroll/

இந்த சுட்டியில் உங்கள் பெயர் இருந்தால் மட்டுமே உங்களால் வாக்களிக்க முடியும்.

3.11.2011

படித்ததில் பிடித்தது - ஜெயலலிதாவுக்கு ஒரு திறந்த மடல்!


.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு... வணக்கம். வளர்க நலம்.

உங்களை நினைத்தால் ஒரு பக்கம் வியப்பாகவும், இன்னொரு பக்கம் வேதனை​யாகவும்  இருக்கிறது. அன்று முதல் இன்று வரை இது ஓர் ஆணாதிக்க உலகம்.

 நீங்கள் இருந்த திரைப்பட உலகமும், இருக்கும் அரசியல் உலகமும் முழுக்க முழுக்க ஆணாதிக்கத்தின் மோசமான ஆளுகைக்கு ஆட்பட்டவை. 1964-ல் ஸ்ரீதரின் 'வெண்ணிற ஆடை’ படத்தில் முதன் முதலாக நீங்கள் அறிமுகமானபோது, தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் முதலமைச்சர் நாற்காலியில் ஒரு நாள் அமரக்​கூடும் என்று கண்ணுறக்க வேளையில் கனவு​கூடக் கண்டிருக்க மாட்டீர்கள்! தமிழர்களின் ரசனை எல்லா வகையிலும் வித்தியாசமானது. திரைப்படங்களில் நாயக, நாயகியராய் இணைந்து நடித்த இருவரையும் முதல்வர் நாற்காலியில் அமரவைத்து அழகு பார்த்த வரலாற்றுச் சாதனை, உலகில் தமிழகத்தைத் தவிர வேறெங்கும் வாய்த்ததே இல்லை.



எம்.ஜி.ஆர்., சிவாஜி என்ற இருவரின் ஆதிக்கத்தில் கட்டுண்டுக் கிடந்த திரையுலகில் அடியெடுத்துவைத்த நீங்கள், இரு வேறுபட்ட குணாம்சங்கள்கொண்ட அந்தக் கலையுலகச் சிகரங்களோடு கைகோத்து உங்கள் தோற்றப் பொலிவினாலும், நடிப்புத் திறமையாலும் முதன்மைக் கதாநாயகியாக முன்னேறியதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை. ஆனால், கதாநாயகிக் கட்டம் முடிந்ததும் தமக்கையாய், தாயாய் வேடம் பூண்டு காலம் முழுவதும் ஒரு நடிகையாகவே வாழ்ந்து முடித்துவிட விரும்​பாமல், எம்.ஜி.ஆர். ஆதரவில் 1981-ல் அரசியல் உலகில் கால் பதித்து, ஆர்.எம்.வீரப்பன் போன்றவர்கள் விரித்துவைத்த சதிவலையை அறுத்தெறிந்து, அவர்களால் இழைக்கப்பட்ட அவமானங்களை சகித்துக்கொண்டு, அ.தி.மு.க-வை உங்கள் அசைக்க முடியாத தலைமையின் கீழ் கொண்டுவந்தீர்களே... அந்த அரிய சாதனை உண்மையிலேயே வியப்புக்கு உரியது!


உங்களுடைய விரிந்த வாசக ஞானம், தெளிந்த ஆங்கிலப் பேச்சு, தளராத தன்னம்பிக்கை, அபூர்வமான அரசியல் ஆளுமை, சர்க்கஸ் கூடாரத்தின் ரிங் மாஸ்டரைப்போல் உங்கள் கட்சியின் அனைவரையும் ஆட்டிப்படைக்கும் அசாத்திய ஆற்றல் அனைத்தும் நீங்கள் வளர்த்துக்கொண்ட பலமான பாது​காப்பு அரண்கள். எம்.ஜி.ஆர். கை தூக்கிவிட்டதனால்​தான் அரசியலில் நீங்கள் இந்த உயரத்தை எட்ட முடிந்தது என்பது பிழையான கருத்து. சரோஜாதேவியும், லதாவும் எம்.ஜி.ஆரே விரும்பி அரசியலில் ஆளாக்க முனைந்து இருந்​தாலும், உங்களைப்போல் உருவாகி இருக்க முடியாது. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்பு உங்கள் தலைமை வாய்த்திருக்காவிட்டால், அ.தி.மு.க. ஓர் அரசியல்சக்தியாக நீடித்திருக்காது என்பதும் நிஜம்.
எல்லாம் சரி. ஆனால், ஒரு கோட்டை எவ்வளவு பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்டு இருந்தாலும், அதற்குள் சில பலவீனங்கள் புலப்​படுவது இயல்பு.


 உங்கள் பலங்களுக்கு சமமாக பலவீனங்களும் பாதித்திருப்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? 'பரிசோதிக்கப்படாத வாழ்க்கை வாழத் தகுதியற்றது’ என்றார் சாக்ரடீஸ். நீங்கள் பரிசோதித்துப் பார்த்து, பள்ளத்தில் வீழ்த்தும் பலவீனங்களில் இருந்து விடுபட விரும்பாததுதான் வேதனைக்கு உரியது.
காமராஜரைப்போலவோ, கலைஞரைப்​போலவோ படிப்படியாக அரசியலில் நீங்கள் வளர்ந்தவர் இல்லை. உங்கள் அரசியல் பிரவேசம் 1981-ல் அரங்கேறியது. உடனே அ.தி.மு.க-வின் கொள்கைப் பரப்புச் செயலாள​ராக உயர்த்தப்பட்டீர்கள். 1988-ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக பணியாற்றினீர்கள். 1989 தேர்தலுக்குப் பின்பு தமிழக சட்டமன்ற வரலாற்றில் எதிர்க் கட்சித் தலைவராக அமர்ந்த முதல் பெண்மணி என்ற பெருமை பெற்றீர்கள்.  நிதி நிலை அறிக்கையை முதல்வ​ராக நின்று சட்டமன்றத்தில் கலைஞர் சமர்ப்பித்தபோது, நீங்கள் உருவாக்கிய கலவர நாடகத்தில் நேர்ந்த விபரீதக் காட்சிகளின் விளைவாக, மக்களின் அனு​தாபத்தைப் பெற்று 1991-ல் கோட்டையில் முதல்வராகக் கொலுவீற்றீர்கள்.
யாருக்கும் எளிதில் கிடைக்காத வரம் தமிழக வாக்காளர்களால், உங்களுக்கு எளிதாக வழங்கப்பட்டது.

 எளிதில் கிடைக்கும் எதுவும் பெரிதாகப் போற்றப்படுவது இல்லை.

வாக்காளர்கள் விருப்பத்தோடு வனைந்து கொடுத்த பதவிக் குடத்தை நீங்கள் நந்தவனத்து ஆண்டி​யைப்போல் கூத்தாடிப் போட்டு​டைத்தீர்கள். மக்களால் தேர்ந்​தெடுக்கப்பட்ட தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் நீங்கள். நேர்த்தியாக உங்கள் நிர்வாகம் நடந்திருந்தால்... கலைஞர் மீண்டும் முதல்வராகும் வாய்ப்பே கனிந்து இருக்காது. அவருடைய குடும்பமும், பரிவாரமும் கோடிக் கோடி​யாய்ப் பணத்தைக் குவிக்கும் சந்தர்ப்பம் பிறந்திருக்காது. கலைஞரின் குடும்பம் உங்களுக்​குத்தான் அன்றாடம் நன்றி சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக, ஆ.ராசா உங்களுக்கு நிரம்பவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறார்.


'அறிவியல்பூர்வமாக ஊழல் செய்தவர் கலைஞர்’ என்று சர்க்காரியா சொன்னதை உரத்த குரலில் ஊர் ஊராய் முழங்கிய நீங்கள், ஊழலின் நிழல் படாத உன்னதமான ஆட்சியை வழங்கிவிடவில்லை. அதிகாரத் துஷ்பிரயோகம், ஆணவப் போக்கு, சொத்துக் குவிப்பு, ஊழலில் திளைத்த அமைச்சர் குழு, விமர்சனங்​களை விரும்பாத சர்வாதிகாரச் சாயல், பழிவாங்கும் மனோபாவம் போன்றவை வாக்காளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியதால், உங்கள் மீது இருந்த நம்பிக்கை நலிவடைந்​தது. 'ஸ்பிக்’ விவகாரத்தில் உங்கள் விருப்பத்துக்கு வளைந்து கொடுக்காத ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகாவின் முகத்தில் ஆசிட் வீசப்பட்டதன் பின்புலம் அறியாமல் தமிழகம் அதிர்ந்தது. தி.மு.க. வழக்கறிஞர் சண்முகசுந்தரத்தின் மீது நடத்தப்பட்ட கொடுமையான தாக்குதலின் பின்னணி புரிந்ததும் நல்ல அரசியலை நாடுவோர் நெஞ்சம் நடுங்கியது. எல்லா​வற்றுக்கும் சிகரம்போல் சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கம் அமைந்துவிட்டது. உங்கள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு நீங்கள் நடத்திவைத்த திருமணத்தில் பளிச்சிட்ட ஆடம்பரம் பாமர மக்களைக்கூட முகம் சுளிக்கவைத்தது.


உங்கள் வீழ்ச்சி கலைஞரின் வியூகத்தில் விளைந்துவிடவில்லை. உங்களுக்கான பள்ளத்தை நீங்களே வெட்டிய விதம்தான் பரிதாபத்துக்கு உரியது.


முன்னாள் முதல்வரே... கடந்த காலத்தை இன்று நிதானமாகத் திரும்பிப் பார்த்து நீங்கள் கற்றறிய வேண்டிய பாடங்கள் கணக்கற்றவை. மிகுந்த நம்பிக்கையுடன் மக்களால் 1991-ல் ஆட்சியில் அமர்த்தப்பட்ட நீங்கள், 1996 தேர்தலில் மிக மோசமாகப் புறக்கணிக்கப்பட்டீர்கள். உங்கள் அமைச்சரவையில் இடம்பெற்ற அனைவரும் தோற்கடிக்கப்பட்டனர். நீங்களே பர்கூர் தொகுதியில் மக்கள் அறியாத ஒரு மனிதரிடம் தோற்கும் நிலை நேர்ந்தது. சரிந்துவிட்ட உங்கள் அரசியல் செல்வாக்கை முற்றாக முடித்துவிட முதல்வர் பொறுப்பேற்ற கலைஞர் காரியத்தில் கண்வைத்தார். உங்கள் மீது 40-க்கு மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு விரைவாக உங்களை சிறைக்கு அனுப்பிவைக்க அடித்தளம் அமைக்கப்பட்டது. கலைஞர் கண்ட கனவு நனவானது.

நீங்கள் சில காலம் சிறைவைக்கப்பட்டீர்கள். 'டான்சி’ வழக்கு உங்கள் உறக்கத்தைக் கலைத்தது. சொத்துக் குவிப்பு வழக்கு 'விடாது கருப்பு’ என்பதுபோல் இன்று வரை தொடர்ந்து உங்களைத் துன்புறுத்துகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் 1.76 லட்சம் கோடியை நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுத்திய 'நேர்மையானவர்கள்’, நீங்கள் 60 கோடி சேர்த்துவிட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை போனதும், இன்று வரை கூச்சம் இல்லாமல் உங்கள் ஊழல் குறித்து வக்கணையாக விமர்சிப்பதும் வேறு கதை.


ஒரே ஒரு ரூபாய் தவறாகப் பெற்றாலும் ஊழல்... ஊழல்தான். யார் செய்தாலும் ஊழல் தண்டனைக்கு உரியதுதான். ஐந்து ஆண்டு ஆட்சியில் நீங்கள் செய்த தவறுகள் மொத்தமாக முற்றுகையிட்டு உங்களை அடியோடு வீழ்த்தியதும், உங்கள் அரசியல் வாழ்வு அஸ்தமித்துவிட்டது என்றே அனைவரும் ஆரூடம் கணித்தனர். 'ஒழிந்தார் ஜெயலலிதா; அழிந்தது அ.தி.மு.க.’ என்று மகிழ்ந்தது கலைஞரின் பரிவாரம்.
'ஃபீனிக்ஸ் பறவை தன் சாம்பலில் இருந்து மீண்டும் உயிர்த்தெழும்’ என்பது நிஜம் அல்ல. ஆனால், அரசியல் உலகம் அதிசயிக்கும் வகையில் உங்கள் சாம்பல் மேட்டில் இருந்து நீங்கள் உயிர்த்தெழுந்ததுதான் நிஜம்.

உங்கள் தவறுகளைத் தமிழகத்து மக்கள் மிகவும் பெருந்​தன்மையுடன் மன்னித்து மீண்டும் ஆட்சி நாற்காலியில் அமரச் செய்தார்கள். 140 தொகுதிகளில் நின்று 132 தொகுதிகளில் வென்று, தனிப்பெரும்பான்மையுடன் நீங்கள் அரசை அமைத்தீர்கள். உங்களோடு கூட்டணி சேர்ந்தவர்கள் 64 தொகுதிகளில் வெற்றிக் கனியைப் பறித்துச் சுவைத்தனர். ஆடம்பர மணவிழா, 'சகோதரி’ சசிகலாவின் குடும்ப அத்துமீறல், டான்சி நிலப் பேரம் என்ற குறைகளை எல்லாம் புறந்தள்ளி 234 தொகுதிகளில் உங்கள் கூட்டணிக்கு 196 எம்.எல்.ஏ-க்களை வழங்கிய வாக்காளர்கள் உங்களிடம் எதிர்பார்த்தது ஒன்றே ஒன்றுதான்... நல்லாட்சி!


அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நீங்கள் நடந்துகொண்டீர்களா சகோதரி? மருத்துவர் ராமதாஸைப்போல் அரசியல் ஆதாயத்துக்காக 'அன்புச் சகோதரி’ என்று நான் அழைக்கவில்லை.


சட்டமன்றத் தேர்தல் 2001-ல் நடந்தபோது நான்கு தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் செய்தீர்கள். அது ஒரு தவறான நடவடிக்கை. தேர்தலில் உங்கள் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், அ.தி.மு.க. ஆட்சி​யைக் கைப்பற்றியதும் நீங்கள் முதல்வராக முயன்றது இரண்டாவது தவறு. கிரிமினல் வழக்கில் இரண்டு ஆண்டு​களுக்குக் குறையாமல் சிறைத் தண்டனை பெற்றவர்கள் முதல்வராக முடியாது என்பது சட்டம். ஆனால், உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து தமிழகத்தின் ஆளுநராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஃபாத்திமா பீவி உங்களை முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தினார். தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தலில் நிற்க முடியாமல் தடுக்கப்பட்ட முதலமைச்சர் நீங்கள் ஒருவரே. ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்ட முதல்வரும் நீங்களே.

 கலைஞருக்குள்ள சாமர்த்தியம் உங்களுக்கு சாத்தியப்படவில்லை. அதனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்பு நீங்கள் பதவியில் இருந்து விலகிப் பன்னீர்செல்வத்தை முதல்வராக்கினீர்கள். யாருக்கு எப்போது எது கிடைக்கும் என்று யார்தான் அறிவார்? வீதியில் விளையாடிய கரிகாலன் கழுத்தில் யானை மாலையிட்ட கதையை எம் கண் முன்னால் நிகழச் செய்தவர் நீங்கள். நான்கு மாதங்கள் முதல்வர் நாற்காலியில் பன்னீர்செல்வம் அமர்ந்திருந்தாலும், பின்னால் இருந்தபடி பரிபாலனம் செய்தது நீங்கள்தானே சகோதரி!


ஒருவழியாக சட்டம் எழுப்பிய தடுப்புச் சுவரைத் தகர்த்துவிட்டு, ஆண்டிபட்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் நாற்காலியைத் தன்னிடம் தக்கவைத்துக்​கொள்வதில் நீங்கள் காட்டிய முனைப்பு, அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்குக்கூட எளிதில் கைவராதது! நீங்கள் மீண்டும் ஆட்சியில் அமர்ந்ததே அரிய சாதனைதான். ஆனால், அதன் மூலம் மக்கள் அடைந்த பயன் என்ன? உங்களைச் சிறைக்கு அனுப்பிய கலைஞரை நீங்கள் சிறைக்கு அனுப்ப நாள் குறித்து நள்ளிரவில் கைது செய்து, மக்கள் அனுதாபத்தை அவர் பக்கம் திருப்பும் திருப்பணியில்தானே ஈடுபட்டீர்கள்!


உங்களுக்குப் பிரச்னை கலைஞர். கலைஞருக்குப் பிரச்னை நீங்கள். உங்கள் இருவர் கால்களிலும் மாறி மாறி மிதிபடுவது மக்கள். 'விதியே, விதியே, தமிழ்ச் சாதியை என் செய்ய நினைத்தாய்?’ என்று சரியாகத்தான் புலம்பினான் பாரதி.
உங்களுடைய அசைக்க முடியாத பலம் அபாரத் தன்னம்பிக்கை. அதுவே சில நேரங்களில் வரம்பு கடந்து பிறர் பார்வையில் தலைக்கனமாய் தரிசனம் தரும்படி நடந்துகொள்வதுதான் உங்களது மோசமான பலவீனம். ஜனநாயக அமைப்பில் விமர்சனங்களை ஆரோக்கியமாக நேர்கொள்ளும் தன்மை மிக முக்கியம். தமிழகத்தில் உள்ள ஆறரைக் கோடி மக்களும் பன்னீர்செல்வம், செங்கோட்டையன்போன்று கை கட்டி, வாய் பொத்தி, முதுகு வளைந்து 'அம்மா’ என்று ஆராதிக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பதுதான் தவறு. ஊடகங்கள் அனைத்தும் ஒத்தூத வேண்டும் என்ற விருப்பம் கலைஞரைப்போல் உங்களுக்கும் உண்டு. 'இந்து’ நாளிதழ் உங்கள் சகிப்புத்தன்மையற்ற நடவடிக்கைகள் குறித்துக் கட்டுரை தீட்டியதற்காக என்.ராம் உட்பட ஆறு பேரை கைது செய்ய முயன்றது சரியான நடவடிக்கையா என்று இப்போது சிந்தியுங்கள். பல்வேறு இதழ்கள் மீது வழக்குப் பதிவு செய்த உங்கள் செயல் பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரானது இல்லையா?


அரசு ஊழியர்கள் 2003-ல் ஓய்வூதியச் சலுகைகளுக்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டபோது ஒரு துளி மையில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேரை வேலை நீக்கம் செய்ததும், இரவில் வீடு புகுந்து அவர்களைக் கள்வர்கள்போல் கைது செய்ததும், சாலைப் பணியாளர்கள் வாழ்வோடு விளையாடியதும்தான் உங்கள் வீழ்ச்சிக்கு வியூகம் அமைத்ததை இப்போதாவது உணர்ந்துவிட்டீர்களா? அப்போது 'அரசு ஊழியர்களை அழைத்துப் பேச வேண்டும்; அன்பால் சாதிக்க வேண்டும்’ என்று உங்களுக்கு அருளுரை வழங்கிய கலைஞருடைய இப்போதைய ஆட்சியில், அதே அரசு ஊழியர்கள் காவல் துறையால் நடுவீதியில் கடுமையாகத் தாக்கப்பட்டனர் என்பது தனியரு கொடுமை!


திருமங்கலம் தேர்தல் பாணி குறித்துக் கடுமையாக விமர்சிக்கும் நீங்கள்தான், உங்கள் ஆட்சியில் இடைத்தேர்தல்கள் நடந்தபோது, அமைச்சர்களின் படையெடுப்பை அறிமுகப்படுத்தினீர்கள். சென்னை மாநகராட்சி இடைத்தேர்தலில் விதிமுறைகளை மீறி உங்கள் தொண்டர்கள் செயல்பட்டபோது நீங்கள் வேடிக்கை பார்த்தீர்கள். சாத்தான்குளம் இடைத்தேர்தலில் நிர்வாக எந்திரத்தை உங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தினீர்கள். வாக்காளர்களுக்கு 'அன்பளிப்பு' தரும் 'ஜனநாயகக் கடமை’யை நீங்களும் செய்தீர்கள். கலைஞரின் குடும்பம் குறித்துப் பேசும்போதெல்லாம், சசிகலா குடும்பம் உங்கள் நினைவில் நிற்பதில்லை. திரைப்பட உலகில் தேவைக்கு மேல் நீங்கள் சொத்து சேர்த்தாயிற்று. உங்களுக்கென்று தனியாக ஒரு குடும்பம் இல்லை. 'தத்துவஞானிகள் ஆளவேண்டும். அவர்களுக்குக் குடும்பம் கூடாது’ என்றார் பிளேட்டோ. அந்த வரம் உங்களுக்கு இயல்​பாக வாய்த்திருந்தது. ஒரு செப்புக் காசும் நேர்மை தவறிச் சேர்க்காமல் ஊழலற்ற நிர்வாகத்தை நீங்கள் நினைத்திருந்தால், தமிழக மக்களுக்குத் தந்திருக்க முடியும். சசிகலா குடும்பம் உங்கள் கால்களை நேர் வழியில் நடக்கவிடாமல் பிணைத்திருக்கும் இரும்புச் சங்கிலி என்று நீங்கள் இப்போதேனும் உணர்ந்தீர்களா?


போகட்டும். உங்கள் 10 ஆண்டு ஆட்சியில் நல்லதே நடக்கவில்லை என்று நான் சொல்லவில்லை. கந்துவட்டிக் கொடுமையில் இருந்து ஏழைகளைக் காப்பாற்றிய நடவடிக்கை, பாமர மக்களின் வாழ்வாதாரத்தைச் சுரண்டிய லாட்டரி சீட்டுக்குத் தடை விதித்த நற்செயல், வீரப்பன் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் வெளிப்படுத்திய துணிச்சல், காஞ்சி சங்கராச்சாரியாரைக் கைது செய்ததில் காட்டிய கண்டிப்பு, மழை நீர் சேகரிப்பில் மக்களை ஈடுபடுத்திய ஆளுமை, கலைஞரால் கை கழுவப்பட்ட வீராணம் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிச் சென்னையின் தாகம் தவிர்த்த ஆட்சித் திறன், தாய்மை உணர்வுடன் தொடங்கிய தொட்டில் குழந்தைத் திட்டம் மூலம் வெளிப்படுத்திய சமூகப் பார்வை, கல்வி வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு பள்ளிப் பிள்ளைகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிய கருணை போன்றவற்றுக்காக நிச்சயம் நீங்கள் பெருமைப்படலாம். உங்கள் ஆட்சியின் சிறப்பு அம்சமாக மக்கள் மறவாமல் நினைப்பது சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு. கட்சிக்காரர்கள் அதிகாரம் செலுத்தும் கொத்தடிமைக் கூடங்களாக காவல் நிலையங்கள் கழிந்துபோக நீங்கள் அனுமதித்தது இல்லை!


சகோதரி... நீங்கள் மூன்றாவது முறை முதல்வராகும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறீர்கள். வலிமையான கூட்டணி உங்களுக்கு வாய்ப்பாக அமைந்து இருக்கிறது. வாக்காளர்களுக்கு வேறு வழி இல்லை. ஜனநாயகத்தில் நன்மை தீமைக்கு நடுவே போட்டி நடந்தால், மக்கள் நன்மையின் பக்கமே நிற்க விரும்புவார்கள். அதற்கான சூழல் இன்னும் கனியாதபோது, பெரிய தீமையைப் புறந்தள்ளிவிட்டு, சிறிய தீமையைத்தான் அவர்கள் தேர்ந்தெடுக்க இயலும். சாம்பல் மேட்டில் இருந்து நீங்கள் மீண்டும் உயிர்த்தெழ வாய்ப்பு உள்ளது. தேர்தல் களத்தின் ஆதரவுக் காற்றை உங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது. அந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடிந்தால்...ஈழத் தமிழர் நலன் காக்க உண்மையான உள்ளுணர்வுடன் நீங்கள் செயற்பட வேண்டும்.


 தமிழகத்தின் ஒரு மீனவரும் கடலில் சாவை சந்திக்காத நிலை வர வேண்டும். இலவசத் திட்டங்கள் என்னும் போர்வையில், ஏழை மக்களை ஏழை மக்களாகவே என்றும் கையேந்தும் இழிநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க நீங்கள் காமராஜர் வழியில் உருப்படியான திட்டங்கள் தீட்ட வேண்டும். டாஸ்மாக்கை அரசுடமையாக்கிய பாவத்தைச் செய்த நீங்கள் பூரண மதுவிலக்கை வழங்க முடியாமற்போனாலும், வீதியெங்கும் பரவியிருக்கும் கடைகளைக் குறைக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக ஊழலற்ற ஆட்சியைத் தந்து நீங்கள் உயர வேண்டும். சசிகலா சாம்ராஜ்யம் மீண்டும் எழுவதற்கு எந்த நிலையிலும் நீங்கள் இடம் அளித்துவிடலாகாது. இந்த முறை நீங்கள் தவறு இழைத்தால்... இனி வாழ்வின் இறுதி வரை ஆட்சி நாற்காலியில் அமர முடியாது என்றே உணர்ந்து செயற்படுங்கள். ஆட்சி மாற்றம் வெறும் காட்சி மாற்றமாக முடிந்துவிடக் கூடாது என்பதுதான் எங்கள் பிரார்த்தனை.

'உழுகலப்பையைப் போல் தாழ்ச்சிகொண்டவன் நான்’ என்றார் இயேசுபிரான். பணிவே நீங்கள் அணியும் மிக உயர்ந்த அலங்காரம் என்பதை மறவாதீர்கள்!


இப்படிக்கு,
நீங்கள் நிச்சயம் மாறியிருப்பீர்கள்
என்ற நம்பிக்கையுடன்,


தமிழருவி மணியன்



நன்றி

ஜூனியர் விகடன்

3.10.2011

படித்ததில் பிடித்தது - கலைஞருக்கு ஒரு திறந்த மடல்!

மிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு... வணக்கம்.
வளர்க நலம்!
என் பால்ய காலந்தொட்டு உங்கள் அரசியலை நான்
பார்த்து வருகிறேன். நீங்கள் ஒரு சாகச அரசியல்வாதி
என்பதில் இங்கு யாருக்கும் சந்தேகம் இல்லை! தமிழகம் கண்ட


தலைவர்களில் பல வகைகளில் நீங்கள் தனித்துவம் மிக்கவர்.
காமராஜரைப் போலவே பாரம்பரியப் பின்புலம், உயர்குடிப் பிறப்பு,
செல்வ வளம், கல்லூரிப் படிப்பு என்று எதுவுமின்றி,
விலாசமற்ற ஊரில் பிறந்து, ஏழ்மையில் வளர்ந்து,
அயராது உழைத்து அரசியல் உலகின் உச்சம்
கண்டவர் நீங்கள்.
காமராஜர் ஏழையாகப் பிறந்து, ஏழையாக வளர்ந்து,
ஏழையாகவே வாழ்ந்து மறைந்தவர். நீங்கள் ஏழையாகப் பிறந்து,
 ஏழையாக வளர்ந்து, இன்று கோடீஸ்வரர்களில் ஒருவராகக்
கொடிகட்டிப் பறப்பவர்.
 காமராஜர் நாட்டுப் பணியில் தாயின் உறவு உட்பட
 சகலத்தையும் துறந்தார். நீங்கள் எதையும் துறக்காமல்
பொதுவாழ்வின் மூலம் சகல நலன்களையும் வீட்டுடைமையாக்கிக்கொண்ட வித்தகராய் விளங்குகிறீர்கள்!


ஈ.வெ.கி.சம்பத் தி.மு.கழகத்திலிருந்து அவசரப்பட்டு விலகிய பின்பு, அண்ணாவுக்கு அடுத்த நாற்காலியில் அமர்ந்திருந்த நெடுஞ்செழியனை இரண்டாம் இடத்திலேயே இருக்கவிட்டு, முதலிடத்தைப் பிடித்து நீங்கள் முதல்வரானது - உங்கள் சாகசச் சரித்திரத்தில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படக்கூடியது! ஓர் உறையில் இரு வாட்கள் இருக்கலாகாது என்று சிந்தித்த நீங்கள் செயற்குழுவின் ஆதரவைத் திரட்டி, செல்வாக்குமிக்க எம்.ஜி.ஆரையே விரட்டி, தனிக்காட்டு ராஜாவாக மகுடம் சூட்டிக்கொண்ட மகத்துவத்தை யார் மறக்கமுடியும்? அரசியல் விளக்கங்களை எழுதவிடாமல் அன்றைய 'இந்திரா தர்பார்’, செய்தித் தணிக்கையைக் கொண்டு வந்தபோது, 'கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆயமகள்’ என்ற முல்லைக் கவி பாடல் மூலம் இலக்கியப் போர்வையில் அரசியல் வகுப்பு நடத்திய உங்கள் ஆற்றல் யாருக்கு வரும்? 'மனசாட்சி உறங்கும்போதுதான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பி விடுகிறது’ என்ற மறக்கமுடியாத வசனத்தைப் 'பூம்புகார்’ திரைப்படத்தில் தீட்டிய உங்கள் மனசாட்சி முற்றாக உறங்கிப் போனதுதான் தமிழருக்கு வாய்த்த சாபம்.



'தன்மானத் தந்தை பெரியார் பள்ளியில், தமிழ் வீரம் போதித்த அறிஞர் அண்ணா கல்லூரியில் பயின்ற எனக்கு அந்த உணர்வும் மழுங்கி விடுமேயானால், நடைப் பிணம் நிகர்த்தவனாகி விடுவேன்’
(கலைஞர் கடிதம் தொகுதி - 5) என்றீர்களே,
 எந்தெந்த வகையில் நீங்கள் பெரியாரையும், அண்ணாவையும்
இன்று பின்பற்றுகிறீர்கள் என்று எங்களுக்குக் கொஞ்சம் விளக்க முடியுமா? 'சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை என்ன தெரியுமா?
 ஐந்து கொள்கைகள்தான்.

கடவுள் ஒழிய வேண்டும். மதம் ஒழிய வேண்டும்.
காங்கிரஸ் ஒழிய வேண்டும். காந்தி ஒழிய வேண்டும்.
பார்ப்பான் ஒழிய வேண்டும். அன்று முதல் இன்று வரை அதே கொள்கைதான் (இறுதிப் பேருரை- 19-12-73) என்றார் பெரியார்.

 இந்த 5 கொள்கைகளில், தன்மானத் தந்தை பெரியார்
பள்ளியில் பயின்ற நீங்கள் இன்று எதைப்
 பின்பற்றுகிறீர்கள்? மஞ்சள் துண்டு எந்தப் பகுத்தறிவின்
அடையாளம்? சாய்​பாபாவை வீட்டில் வரவேற்றுப் பேசியதும்,
 உங்கள் வீட்டார் அவர் கால்களில் விழுந்து ஆசி பெற்றதும்
 பெரியாரின் பகுத்தறிவுப் பாசறை தந்த பாடமா?


 தன்னை வாழ்த்தினால் 'நண்பர்’ என்று புகழ்வதும்,
விமர்சனம் செய்தால் 'பூணூல்’ என்று எள்ளி நகையாடுவதும்
எந்த வகையில் பார்ப்பன எதிர்ப்பு?

 கஸ்தூரிபாயைத் தன் வழியில் திருப்பியவர் காந்தி.
 நாகம்மையையும், மணியம்மையையும் தன் மனதின்
போக்குக்கேற்ப மாற்றியவர் பெரியார்.
 வீட்டில் கொண்டுவர முடியாத மாற்றத்தை நாட்டில்
கொண்டுவருவேன் என்பது நகைப்​புக்குரியது அல்லவா!

பக்திப் பரவ​சத்தில் கோயில் கோயிலாகச் சுற்று​வது ஜெயலலிதா மட்டுமன்று, உங்கள் வீட்டு உறவுகளுந்தானே!
அண்ணா இறுதி நாள் வரை காங்​கிரஸை ஆதரிக்கவில்லை.
மதுவிலக்கை எதிர்க்கவில்லை. ஆனால், நீங்கள் இரண்டு
நிலைகளிலும் அண்ணா வழியில் நிற்க​வில்லையே;
 'என்னைப் பொறுத்த வரையில் பதவி முடிவு மட்டுமல்ல,
 வாழ்வின் முடிவே ஏற்படப் போகிறது என்று தெரிந்தாலும்,
 அப்​போதும் என் நினைவு உள்ளவரையில் பெரியாரையும் அண்ணாவையும் அவர்கள் தந்த லட்சியங்களையும் கொள்கைகளையுந்தான் கூறிக்​கொண்டிருப்பேன்.

மரணப் படுக்​கையில் என் நாக்கு அசையும் சக்தியை
 இழந்துவிடுமானால், என் நெஞ்சத் துடிப்புகள் கழகத்தின்
பெருமைக்குரிய கொள்கைகளையே ஒலித்துக்
கொண்​டிருக்​கும்.

 அம்மா, அப்பா என்று சொல்லி உயிர் பிரியப் போவதில்லை.
 'அண்ணா! அண்ணா!’ என்று சொல்லித்தான் இந்த
 உயிர்த் துடிப்புகள் இறுதியாக அடங்​கும்’
 (கலைஞர் கடிதம் தொகுதி - 5) என்று சொன்ன நீங்கள்
அண்ணா எதிர்த்த காங்கிர​ஸின் உறவுக்காக ஏங்கி
நின்றதும், நிற்பதும் நியாயந்தானா கலைஞரே?


'சித்ரவதை, தூக்கு மேடை, கால் வேறு கை வேறாக
 வெட்டிக் கடலில் எறிவது போன்ற எந்தக்
கொடுமையையும், கொண்ட கொள்கைகளுக்காகத்
தாங்கத் தயார்! இது அண்ணாவின் மீது ஆணையாக
 எடுத்துக்கொண்டுள்ள சூளுரை’ என்று சொன்ன கலைஞரே...
 உங்களால் ஈழத் தமிழருக்காக மூன்று மணி நேரத்துக்கு மேல் உண்ணாவிரதம்கூட இருக்க இயலவில்லையே?
எதையுமே நீங்கள் அழகாக எழுதுகிறீர்கள்.
 உணர்வு ததும்பப் பேசுகிறீர்கள்...
ஆனால், எழுத்துக்கும் பேச்சுக்கும் எதிராகவே நடக்கிறீர்கள்.
அது ஏன்?

'முந்திரா ஊழல் முப்பத்து முக்கோடி தேவர்களும் அறிந்த
விவகாரம். அமீர்சந்த் பியாரிலால் விவகாரம், அதிலே
சிக்கிக் கொண்டு தவித்த தவிப்பு, இதெல்லாம் ஈரேழு
பதினாலு உலகமும் சிரிப்பாய்ச் சிரித்ததை யாரும்
 மறந்து விடவில்லை’ என்றும் 'காங்கிரஸ் மாளிகை
பாழடைந்த மண்டபமாகி விட்டது. அதிலே வெளவால்​கள்
 குடியேறத்தான் செய்யும்’ என்றும் (கலைஞர் கடிதம், தொகுதி - 1)
 1968-69-களில் உடன்பிறப்புகளிடம் கடிதங்கள் மூலம் காங்கிரஸ் எதிர்ப்பைக் கடுமையாக விதைத்து​விட்டு, 1971 தேர்தலில் அதே காங்கிரஸைக் கட்டித் தழுவியபடி களத்தில் நின்றீர்களே...
அந்த நட்புக்குச் செலுத்திய நன்றிதான் கழகத்தின் மீது
காங்கிரஸ் பொழிந்த புகழு​ரைகள்(!).


நீங்கள் பதவிப் பல்லக்கில் பவனி வருவதற்கு
மத்தியிலும், மாநிலத்திலும் தோள் கொடுத்தால்
காங்கிரஸ் சமதர்மம் இனிக்கும். சுமப்பதை விட்டுவிட்டு,
அவர்களும் உங்களோடு சேர்ந்து பல்லக்கில் சவாரி
செய்ய நினைத்தால் காங்கிரஸின் ஆதிக்கம் கசக்கும்.
 'சமத்துவம் இன்மையே... உனக்குப் பெயர்தான்
இந்து மதமா?’ என்று கேட்டார் அண்ணல் அம்பேத்கர்.
 'சுயநலமே... உனக்குப் பெயர்தான் தி.மு.கழ​கமா?’
 என்று கேட்கத் தோன்றுகிறது கலை​ஞரே!

 'பதவிகளுக்காக, பவிசுகளுக்காக, அந்தஸ்துகளுக்காக,
அதிகாரங்களுக்காக இந்த இனத்தைக் காட்டிக் கொடுக்கிற
 இழி செயலுக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தில்
இருக்கின்ற ஒரு சாதாரணத் தொண்டன்கூடத் தயாராக இல்லை’ (முரசொலி 7-7-1981) என்று வீர முழக்கமிட்டவர்
 நீங்கள். ஆனால், ஈழம் எரிந்தபோது, நம் இனம் கரிந்தபோது
களத்துக்கு வராமல் பாசறையிலேயே பதுங்கிவிட்டது
 ஏன் கலைஞரே?

 'தியாகத் திருவிளக்கு சோனியா காந்தி’ என்று பரவசம்
 பொங்கப் புகழ்மாலை சூட்டிய நீங்கள், வீரத்தின்
விளைநிலம் பிரபாகரனை ஈன்ற பார்வதி அன்னையை
மனிதநேயமின்றி விமான நிலையத்தில் பாதம் பதிக்க
 அனுமதிக்காமல் திருப்பி அனுப்​பிய இந்திய அரசின்
வன்கொடுமைக்கு எதிர்ப்புக்​குரல் எழுப்பாதது ஏன்
கலைஞரே?

பதவி நாற்காலியைத் தக்க வைத்துக்கொள்ள சோனியா காந்தி
என்னும் 'சொக்கத் தங்கத்தின்’ கருணைப் பார்வைக்கு
இவ்வளவு தூரம் முதுகு வளைந்திருக்க வேண்டுமா
முத்தமிழறிஞரே!

கலைஞரே... கடந்த இரண்டு ஆண்டுகளில் நீங்கள் இரண்டு
 முறை மட்டும் புதுடெல்லிக்குப் புறப்பட்டீர்கள்.
 பிரபாகரன் சடலம் என்று ஒரு சடலத்தை ஊடகங்கள்
ஓயாமல் காட்டிக் கொண்டிருந்தபோது, உலகத் தமிழர்கள்
செய்வதறியாது சோகம் கனக்க விழிநீர் வெள்ளமாய்ப்
பெருக்கியபோது, தள்ளு வண்டி​யில் அமர்ந்தபடி
 சோனியாவிடம் உங்கள் மகனுக்கும், மகளுக்கும்,
 பேரனுக்கும் அமைச்சர் பதவி கேட்டு அலைக்கழிந்தீர்கள்.

 அதற்குப் பின்பு ஆயிரம் பிரச்னைகள் தமிழகத்தில் அரங்​கேறின. ராமேஸ்வரம் முதல் நாகப்பட்டினம் வரை அன்றாடம் மீனவர்கள் சிங்களரால் வேட்டையாடப் பட்டனர். இன்று வரை 400-க்கும்
மேற்பட்ட மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நீங்கள் கைநோக
மன்​மோகன்சிங் அரசுக்குக் கடிதம் எழுதிக் கடமை​யாற்றினீர்கள்.
 இப்போது இரண்டாவது முறை​யாக முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்கும் போர்வையில் புதுடெல்லி சென்று ஆ.ராசாவைக்
காக்கவும், காங்கிரஸ் கூட்டணி நிலைக்கவும் அரும்பாடு பட்டீர்கள்.

 உங்கள் கொள்கைப் பிடிப்பு, நினைக்கும்போதே நெஞ்சமெல்லாம்
 சிலிர்க்கச் செய்கிறது கலைஞரே!
'எந்தப் பதவியானாலும், எந்த மட்டத்திலா​னாலும் அதனைத்
தேடிப்போய் நெருக்கடி கொடுத்துப் பெற முனையும்போதோ,
 அல்லது பெற்றுவிட்ட பிறகோ, உன்னைப் பற்றி உனக்கே
 ஒரு வெறுப்பு தோன்றும், உனக்குத் தோன்றுகிறதோ இல்லையோ, நாட்டுக்குத் தோன்றும்’ (கலைஞர் கடிதம் - தொகுதி 1) என்று உடன்பிறப்புக்கு எவ்வளவு தெளிவாக 9-11-68-ல் நீங்கள் கடிதம் தீட்டியிருக்கிறீர்கள்! அவ்வளவும் சத்திய வார்த்தைகள்.

 இன்று உங்களைப் பற்றி நாட்டுக்கு அப்படித்தான்
தோன்றி​விட்டது. 'வாண்டையார், வடபாதி மங்​கலத்தார்,
 நெடும்பலத்தார், குன்னியூரார், மூப்பனார், மன்றாடியார்,
பேட்டையார், பெரும்பண்ணையார், செட்டி நாட்டார்,
 சிவகங்கை சீமையார்’ என்று அண்ணா அன்று
மேடைதோறும் காங்கிரஸில் இருந்த பணக்காரர்களைப்
 பட்டியலிட்டார்;

 சென்னையில் 1951 டிசம்பரில் நடை​பெற்ற தி.மு.க. முதல்
மாநில மாநாட்​டில், 'தமிழகத்தில் உண்மையான கம்யூனிஸ்ட்
கட்சி தி.மு.கழகம்தான்’ என்று பிரகடனம் செய்தார். நீங்களும்
 பல்வேறு தருணங்களில் 'நானும் ஒரு கம்யூ​னிஸ்ட்’ என்று
 'நகைச்சுவை’ ததும்பப் பேசியிருக்கிறீர்கள். இன்று உங்கள்
குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் குபேர​புரியின்
வாரிசுகளாக விண்ணிலும் மண்ணிலும் வலம் வருகின்றனர்.
 இந்த ரசவாத மாற்றம் எப்படி நிகழ்ந்தது கலைஞரே!
நாற்பதாண்டுகளுக்கு முன்பு நடைபாதை மனிதர்களாக
இருந்த உங்கள் அமைச்சர்களும், தானைத் தளகர்த்தர்களும்
 தமிழகத்து அம்பானி​களாய் உருமாறிய ரகசியத்தை
உருக்​குலைந்து நிற்கும் எந்தமிழர் அனைவருக்கும்
நீங்கள் சொல்லிக் கொடுத்து விட்டால் இலவசங்​களுக்கே
 இடமிருக்காது கலைஞரே!


ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசா சிக்கிச் சிறைப்பட்டதும்,
 சி.பி.ஐ. கரங்கள் கலைஞர் தொலைக்காட்சி வரை விரிந்ததும்
 உங்கள் அம்பறாத் தூணியில் தூங்கிக் கொண்டிருந்த
ஆரிய - திராவிட அம்பெடுத்து வீசி விட்டீர்கள்.
 காமராஜரின் வேட்பாளராக சஞ்சீவரெட்டியும், இந்திராவின்
வேட்​பாளராக வி.வி.கிரியும் குடியரசுத் தலைவர் தேர்தலில்
நின்றபோது நீங்கள் வி.வி.கிரியைத்தானே வெற்றி பெறச்
 செய்தீர்கள். இந்திராவும், கிரியும் உங்கள் வார்த்தையில் ஆரியர்; காமராஜரும், சஞ்சீவரெட்டியும் திராவிடர். அப்போது
எங்கே போனது உங்கள் இனமான உணர்வு?

'இராமன் இரு பேச்சாளன் இல்லை’ என்பான் வான்மீகி.
இரு பேச்சு இல்லாமல் நீங்கள் இல்லை என்பதுதானே
உண்மை கலைஞரே!

ஆறாவது முறை நீங்கள் ஆட்சிக்கு வர ஆசைப்படுகிறீர்கள்.
 நல்லது. ஐந்து முறை நீங்கள் முதல்வராக இருந்து
என்ன சாதித்​தீர்கள்? மாநில சுயாட்சி வாங்கிக் கொடுத்து
விட்டீர்களா? தமிழை மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக
 ஆக்கி விட்டீர்களா? உங்களால் ஊழல் வழக்குகளுக்குள்ளான
கண்ணப்பன், செல்வ​கணபதி, இந்திரகுமாரி, ரகுபதி, முத்துசாமி
போன்​றவர்களைக் கழகத்தில் சேர்க்காமல் அரசியல்
ஆரோக்கியம் காத்தீர்களா? சட்டமன்றத்தில் தீர்மானம்
 நிறைவேற்றிய பின்பு மேலவையைக் கொண்டுவர
நீங்கள் மேற்கொண்ட முயற்சியில் பத்தில் ஒரு பங்காவது
 தமிழை உயர் நீதிமன்ற மொழியாக்க முனைந்தீர்களா?

 நிர்வாக மொழியாகத் தமிழை நூறு விழுக்காடு
நடைமுறைப்படுத்தி விட்டீர்களா? 'உணவு, உடை,
குடியிருப்பிடம் எனும் மூன்று அடிப்படைத்
தேவைகளைக்கூட 17 ஆண்டு ஆட்சிக்குப் பிறகும்
நிறைவேற்றிக் கொடுத்திட இயலாத காங்கிரஸ்
ஏன் ஆட்சியில் நீடிக்க வேண்டும்?’ என்று
கேட்டார் அண்ணா... அதையே உங்களிடம் நாங்கள்
கேட்கிறோம். ஊழலற்ற ஆட்சிக்கும் உங்களுக்கும் என்றாவது தொடர்பிருந்ததுண்டா?


ஈழத் தமிழர் நலன் காக்கத் தவறிய நீங்கள் ஆட்சியில்
நீடிப்பதால், உலகத் தமிழருக்கு என்ன நன்மை?
தாயக மீனவர் மீது நடக்கும் தாக்குதலைத் தடுக்க
முடியாததும் உண்மை தானே! வீதிக்கு வீதி மதுக்கடை
திறந்து ஆண்டுக்கு 13 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழை
மக்களை மயக்கி வாங்கி, இலவச நாடகம் நடத்தி
அதே மக்களிடம் பிச்சைக்கார மனோபாவத்தை வளர்க்கும்
 உங்க​ளுக்கு ஏன் நாங்கள் வாக்களிக்க வேண்டும்
என்று லட்சக்கணக்கான மகளிர் கேட்பது
உங்கள் காதில் விழவில்லையா?

நீங்களும், உங்கள் வாரிசுகளும், கழக உடன்பிறப்புகளும்
 அதிகாரத்தைத் தொடர்ந்து சுவைக்கவும், சொத்துகளை
எல்லையின்றிக் குவிக்கவும், மணற் கொள்ளையிலிருந்து
அரிசிக் கடத்தல் வரை அமோகமாக நடத்தவும் 'திருமங்கலம் ஃபார்முலா’வை நம்பிக் கொண்டிருக்கிறீர்கள். எந்தப் பணத்தை நம்புகிறீர்களோ அது தான் உங்கள் காலையும் வாரப் போகிறது. பொறுத்திருந்து பாருங்கள்!


இப்படிக்கு,

ஐந்தாவது முறையாவாது நல்லாட்சி தருவீர்கள் என்று நம்பி ஏமாந்த,


தமிழருவி மணியன்



நன்றி

ஜீனியர் விகடன்

3.07.2011

புதிய நீதிக் கதை

ஒரு நாட்டின் அரசனுக்கு இரண்டு அழகிய கழுகுகள்
பரிசாக வந்தன. அவை  அந்த அரசனின்  வாழ்நாட்களில்
பார்த்திராத அழகுடன் இருந்தன.அவைகளின் மேல்
மிகப் பாசம் வைத்த அரசன், பறவை நிபுணரை அளித்து
பழக்கச் சொன்னார்.

சில மாதங்களுக்குப் பிறகு வந்த பறவை நிபுணர்
அரசன் அளித்த பறவைகளில் ஒன்று மிக அழகாக
மிக உயரத்தில் வானத்தில் பறப்பதாகவும் , மற்றொரு
பறவை வந்த நாளிலிருந்து அது அமர்ந்த மரத்தின்
கிளையை விட்டு நகர மறுப்பதாகவும் கூறினார்.

அந்த அரசன் நாட்டிலிருந்த அனைத்து பறவை
நிபுணர்களையும் அழைத்து ஆலோசனை  நடத்தினார்.

அனைவரும் தங்களால் முடிந்த அனைத்து
முயற்சிகளையும் செய்தனர். ஆனால் ஒன்றும்
வெற்றி அடையவில்லை.

அரசன் தன்னுடய அமைச்சரவையை கூட்டி
ஆலோசனை நடத்தினார். அவர்களாலும் அதை
பறக்கச் செய்ய முடியவில்லை.

முடிவாக நாட்டு மக்களிடம் தண்டோரா
மூலம் அறிவிக்கச் சொன்னார்,அந்தப் பறவையை
பறக்க வைப்பவருக்கு பரிசளிப்பதாக அறிவிக்கப்பட்டது.

பலரும் பலவிதமாக முயன்றும் ஒன்றும்
வெற்றி அடையவில்லை.

முடிவாக ஒரு நாள் அந்த அரசன் சாளரம்
வழியாக பார்த்த போது அந்த பறவை
பறந்து கொண்டிருப்பதை கண்டு மிகவும்
மகிழ்ச்சி அடைந்து,
அதைப் பறக்க வைத்தவரை அரசவைக்கு
அழைத்து  வரச் சொன்னான்.

அரசவையே வியந்து பார்த்துக் கொண்டிருந்தபோது
வந்தவரோ மிக சாதாரண விறகுவெட்டி.

அரசன் விறகுவெட்டியிடம் எவ்வாறு பறக்க
வைத்தீர்கள் என்று கேட்டதுக்கு, அவரோ மிகச்
சாதாரணமாக ஒன்றுமில்லை அரசே,
அந்தப் பறவை அமர்ந்திருந்த மரக்கிளையை
வெட்டினேன் என்றார்.

எங்கே நீதி என்று தேடுகிறீர்களா, இதோ

மனிதர்களாகிய நாமும் அந்தப் பறவையைப்
போல்தான் பறக்கும் திறமை அனைவருக்கும்
இருந்தும் மரக்கிளையை விட்டு வெளியேற
மறுக்கிறோம். வானமே வசப்படக் காத்திருந்தும்
மரக்கிளையைப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறோம்.

பலவிதமான வாய்ப்புகள் நம்முன் கொட்டிக்கிடந்தாலும்
இருப்பது போதும் என்று இலவசத்திற்கு
அலைந்து கொண்டிருக்கிறோம்.



பி.கு

இந்தப் பதிவிற்கும் வரவிருக்கும் தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
வழக்கம்போல் வசூல்களை வாங்கிக் கொண்டு ஓட்டுப்போடுவதற்கு முன் சில நிமிடங்கள் யோசித்து செயல்பட்டால் அனைவருக்கும் நல்லது,
.